பண்டிகைக்காக சிறப்பாக தயாரிக்கப்படும் இனிப்புகள் உள்பட உணவு பொருள்கள் தயாரிப்பாளர்கள் உரிமம் பெற வேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ளது. பண்டிகைக் காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரங்கள் மற்றும் கேக் போன்ற உணவுப் பொருள்களை மக்கள் விரும்பி வாங்குவர். தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவுப் பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.
இனிப்பு மற்றும் பேக்கரி தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருள்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்க வேண்டும். கலப்பட பொருகளையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருள்களுக்கு, விவரச் சீட்டு வைத்து அதில் தயாரிப்பாளரின் முழுமுகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிக்கப்பட்ட, பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலவதியாகும் காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.
மேலும், உணவுப் பொருள்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொது மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது, உணவுப் பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும். இது தொடர்பாக புகார்கள் இருந்தால் விருதுநகர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலரி டமோ அல்லது மாநில உணவுப் பாதுகாப்பு துறை அலுவலக கட்செவி அஞ்சல் 94440 42322 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என்றார் அவர்.