ம.ரெட்டியபட்டி வட்டார விவசாயிகள், வேளாண் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் மூலம், அரசு மானியத்தில் அசோலா தீவனப் பயிர் வளர்த்தல் மற்றும் சூரிய மின்விளக்குப் பொறியை அமைத்துப் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வட்டார வேளாண் உதவி இயக்குநர் சோ. துரைக்கண்ணம்மாள் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தகவல்: அசோலா தீவனப் பயிரானது ஒரு கிலோ கடலைப் புண்ணாக்குக்கு இணையான சத்து கொண்டது. இப்பயிரை குறைந்த செலவில் வளர்த்து 15 நாள்கள் இடைவெளியில் அறுவடை செய்து பயன்படுத்தலாம்.
இத் தீவனத்தைப் பயன்படுத்தினால் பால் மாடுகள் 10 முதல் 20 சதவீதம் அதிகம் பால் சுரப்பதுடன், அதிகம் கொழுபில்லாத சத்தான பால் கிடைக்கிறது. கோழித் தீவனமாகப் பயன்படுத்தினால், அதிக கணம் கொண்ட மஞ்சள் கருவுடன் கூடிய முட்டைகளின் எண்ணிக்கையும் அதிகமாகக் கிடைக்கும்.
எனவே, வட்டார விவசாயிகள் தங்கள் நிலத்தில் அரசு மானியத்தில் (தலா ரூ.4000 மட்டும் )அசோலா தீவனப் பயிர் திடல் அமைத்தல் மற்றும் சூரியமின்சக்தி பூச்சிப்பொறி அமைத்தல் ஆகியவற்றுக்கு, வட்டார வேளாண் அலுவலகத்தை
அணுகுமாறு அதில் தெரிவித்துள்ளார்.