விருதுநகர் பகுதியிலுள்ள ஓனாண் ஓடையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், ஏற்கெனவே ஓடையை கடக்க உதவும் பாலம் சேதமடைந்திருப்பதால், பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
விருதுநகர் ஆத்துப்பாலம் கவுசிகா ஆற்றின் அருகே ஓனாண் ஓடை உள்ளது. இந்த ஓடை வழியாக, கருப்பம்பட்டி, பாவாலி, குமாரலிங்கபுரம் மற்றும் சிவகாசி சாலையில் பெய்யும் மழை நீரானது, கவுசிகா ஆற்றை வந்தடைகிறது. கடந்த 2 நாள்களாக, விருதுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், ஓனாண் ஓடையில் மழை நீரானது பெருக்கெடுத்து ஓடுகிறது. கவுசிகா ஆறு மற்றும் ஓனாண் ஓடை இணையும் இடத்தில், கூரைக்குண்டு ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும், இங்குள்ள தூய ஜெபமாலை அன்னை தேவாலயத்துக்கு, முத்துராமலிங்கம் நகர், சிவகாசி சாலை, பாலம்மாள் நகர், எம்.ஜி.ஆர். சாலை, சாத்தூர் சாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் வழிபாட்டுக்காக வந்து செல்கின்றனர்.
ஏற்கெனவே, சில ஆண்டுகளுக்கு முன் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், ஓனாண் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் உடைந்தது. அதையடுத்து, பாலம் சீரமைக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் சிறு மழைக்குக் கூட சிரமப்பட்டு வந்தனர்.தற்போது பெய்த தொடர் மழையால், ஓனாண் ஓடையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் வெளியே வர முடியாமலும், அப்பகுதிக்குச் செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, ஓனாண் ஓடையில் உடைந்த பாலத்தை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.