விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்களின் சார்பில், இளம் விஞ்ஞானி-2017 என்ற மாநில அளவில் பள்ளிகளுக்கிடையேயான அறிவியல் கண்காட்சிப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இக் கண்காட்சியை, வி.பி.எம்.எம். மகளிர் கல்விக் குழுமத்தின் தலைவர் வி.பி.எம்.சங்கர் தலைமையில், தாளாளர் பழனிச்செல்வி சங்கர் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். அறிவியல் கண்காட்சியில், 58 பள்ளிகளிலிருந்து வந்துள்ள மாணவ-மாணவியர் 200-க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.
இக்கண்காட்சியை, மாவட்டம் முழுவதுமிருந்து வந்திருந்த பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 2,500 மாணவ-மாணவியர் கண்டு ரசித்தனர். வி.பி.எம்.எம். கட்டட நுண்கலைக் கல்லூரியின் சார்பாக, மாணவியர்கள் நமது கலாசாரம், பாரம்பரியம், ஓவியம் மற்றும் கட்டடவியல் சார்ந்த படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள 6 தரமான படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. முதல் பரிசாக ஒரு படைப்புக்கு ரூ.20,000, இரண்டாம் பரிசாக இரு படைப்புகளுக்கு தலா ரூ.10,000 மற்றும் மூன்றாம் பரிசாக 3 படைப்புகளுக்கு தலா ரூ. 5,000 வழங்கப்பட உள்ளது.
மேலும், மிகச் சிறந்த படைப்பை அளித்துள்ள ஒரு மாணவர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு இளம் விஞ்ஞானி-2017 என்ற பட்டம் வழங்கப்படும். வி.பி.எம்.எம். கல்வி நிறுவனம் சார்பில் மாணவ, மாணவியர் கண்காட்சியை கண்டு களிக்க இலவச கல்லூரி பேருந்து மாவட்டம் முழுவதும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை, நிறுவனங்களின் கல்வி இயக்குநர் டாக்டர் ரா. சபரிமாலா, பள்ளி முதல்வர் சுபிமோள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பேராசிரியர்கள் செய்து வருகின்றனர்.