விருதுநகர் அருகே யானைக் குழாய் பகுதியில் பழமையான குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததால், குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது.
விருதுநகர் நகராட்சிப் பகுதியில் உள்ள 36 வார்டுகளில் சுமார் 75 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, தாமிருவருணி கூட்டுக் குடிநீர் திட்டம், ஆனைக்குட்டம் ஆழ்துளைக் கிணறு, ஒண்டிபுலி நீர்த் தேக்கத்திலிருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
இதன்மூலம், 15 நாள்களுக்கு ஒரு முறை வார்டு வாரியாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், மழை நேரங்களில் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால், பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தி வருகின்றனர். இதனால், ஏராள மானோர் வாகனங்களில் விற்கப்படும் குடிநீரை குடம் ரூ. 10 விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆனைக்குட்டம் நீர்த்தேக்கம் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து தினமும் சுமார் 22 லட்சம் குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆங்காங்கு குழாய் பழுது காரணமாக தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. விருதுநகர் யானைக்குழாய் தெரு வழியாகச் செல்லும் குடிநீர் குழாய்கள் முற்றிலும் சேதமடைந்து விட்டன. இதனால், இப்பகுதியில் அடிக்கடி குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
யானைக் குழாய் பகுதியில் சுமார் 500 மீட்டர் அளவுக்கு புதிய குழாய்கள் அமைத்தால் மட்டுமே குடிநீர் வீணாவதைத் தடுக்க முடியும் என, நகராட்சி பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, குறைந்த அளவே கிடைக்கின்ற குடிநீரை முழுமையாகப் பயன்படுத்த தேசமடைந்த பகுதியில் புதிய குடிநீர் குழாய் பதிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.