சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை விவசாயியை கம்பால் தாக்கியதாக, கணவன், மனைவி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிவகாசி அருகே மண்குண்டாம்பட்டியைச் சேர்ந்த விவசாயி முனியாண்டி (60). இவருக்குச் சொந்தமான விவசாய நிலம் நெடுங்குளம் கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த பால்கண்ணன் என்பவருக்கு குத்தகைக்கு விட்டிருந்தாராம்.
இந்நிலையில், நிலத்தை பால்கண்ணன் வேறொருவருக்கு விற்றுவிட்டாராம். இதையறிந்த முனியாண்டி, என்னுடைய நிலத்தை எப்படி விற்கலாம் என்றும், இது பெரிய மோசடி என்றும் பால்கண்ணனிடம் கூறியதையடுத்து, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறில், பால்கண்ணன் மற்றும் அவரது மனைவி லிங்கம்மாள் சேர்ந்து முனியாண்டியை கம்பால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த முனியாண்டி, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த புகாரின்பேரில், எம்.புதுப்பட்டி போலீஸார் கணவன், மனைவி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.