மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்குச் செல்லும் பாதை சேறும் சகதியுமாக இருப்பதால், தார் சாலை அமைத்துத் தரவேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே மதுரை-தூத்துக்குடி நான்குவழிச் சாலையில் செட்டிக்குறிச்சி கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் 1 கி.மீட்டர் தொலைவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்குச் செல்லும் வழியில் தார் சாலை வசதி ஏற்படுத்தவில்லை. இதனால், கடந்த 2 வாரங்களாக பெய்த தொடர் மழை காரணமாக, இக் கல்லூரிப் பாதை சேறும் சகதியுமாகி முற்றிலும் பயன்படுத்த இயலாத நிலைக்கு மாறிவிட்டது.
இப்பாதையில் தான் இக்கல்லூரியில் பயிலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தினமும் சென்று வர வேண்டும். எனவே, மாணவர்களின் நலன் கருதி கல்லூரிக்குத் தனிச் சாலை வசதி செய்து தரவேண்டும் என மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.