மல்லாங்கிணறு, திருச்சுழி பகுதிகளில் போலீஸ் தடையை மீறி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட 40 பேர் மீது, போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பரமக்குடியில் செப்டம்பர் 11 ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, பல்வேறு இடங்களில் போலீஸார் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர். மேலும், காவல்துறை அனுமதித்த வழித்தடத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் சொந்த வாகனத்தில் மட்டுமே பரமக்குடிக்குச் செல்லவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், விதிமுறைகளைப் பின்பற்றாமலும், தடை உத்தரவை மீறியும், கூடுதலான எண்ணிக்கையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனத்தில் சென்றதாக, வலுக்கலொட்டி முத்திருளன் மகன் தங்கராஜ், வரலொட்டியைச் சேர்ந்த சின்ன முனியாண்டி மகன் செல்வ முனீஸ்வரன், மேட்டுப்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் விக்னேஷ், அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் மகன் முருகன், முத்துமுனியாண்டி,
செல்வம் மற்றும் திருச்சுழி நாடாகுளத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் திருமுருகன் உள்பட 5 பேர் என மொத்தம் 40 பேர் மீது மல்லாங்கிணறு, திருச்சுழி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.