அண்ணா 109 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விருதுநகர் நகராட்சி அருகே உள்ள அண்ணா சிலைக்கு, அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். இதில், எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலர் கலாநிதி, ஒன்றியச் செயலர் மூக்கையா, நகரச் செயலர் முகமது நெய்னார், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்டச் செயலர் தர்மலிங்கம் உள்ளிட்ட அதிமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அதைத் தொடர்ந்து, தினகரன் அணியைச் சேர்ந்த ஆறுமுகம் தலைமையில், அதிமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: அதிமுக சார்பில், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மு. சந்திரபிரபா முத்தையா தலைமையில், அக்கட்சியினர் ஏராளமானோர் தேரடியிலிருந்து பேரணியாக பேருந்து நிலையம் வந்தடைந்தனர். பின்னர், அங்குள்ள அண்ணா சிலைக்கு சந்திரபிரபா எம்.எல்.ஏ., கட்சியின் மாவட்டப் பொருளாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், வத்திராயிருப்பு ஒன்றியச் செயலர் சுப்புராஜ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அ. மகேஸ்வரன், ஒன்றியச் செயலர் மயில்சாமி உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும், நகரின் 33 வார்டுகள் மற்றும் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு, அண்ணாவின் உருவப்படத்துக்கு மாலையணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, முன்னாள் மாவட்டக் கவுன்சிலரும், ஒன்றியப் பொருளாளருமான த. முத்தையா செய்திருந்தார்.
டி.டி.வி. தினகரன் ஆதரவு அதிமுகவினர், நகரச் செயலர் வி.டி. முத்துராஜ் தலைமையில் ஊர்வலமாக பேருந்து நிலையம் வந்தனர். பின்னர், அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சர் த. இன்பத்தமிழன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கி. காளிமுத்து, முன்னாள் நகரச் செயலர் முனியசாமி உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
திமுக நகரச் செயலர் வழக்குரைஞர் ஜி.ஜி. அய்யாவுப்பாண்டியன் தலைமையில் ஊர்வலமாக வந்த அக்கட்சியினர், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சாத்தூர்: அதிமுக அம்மா அணியின் நகரச் செயலர் முருகன் தலைமையில், சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் அண்ணாவின் உருவப் படத்துக்கு தினகரன் அணியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், இனிப்புகளை வழங்கினர். இதில், நகர அம்மா பேரவைச் செயலர் வேல்சோலைராஜ், மாவட்ட மாணவரணிச் செயலர் எஸ்.டி. முனீஸ்வரன் உள்ளிட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நகர் காவல் நிலையம் அருகே நடைபெற்ற விழாவில், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில், சாத்தூர் நகரச் செயலர் வாசன் தலைமையில், ஒன்றியச் செயலர் சண்முககனி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம் உள்ளிட்ட ஏராளமானோர் அண்ணாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தனர். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதேபோன்று, சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் மேட்டமலையிலும், மேற்கு ஒன்றியம் சார்பில் உப்பத்தூரிலும் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திமுக சார்பில், சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் அக்கட்சியினர் நடத்திய விழாவில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். பின்னர், அண்ணாவின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில், திமுக நகர, ஒன்றிய நிர்வாகிகளும், ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
ராஜபாளையம்: சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ். தங்கப்பாண்டியன் தலைமையில், மாவட்ட துணைச் செயலர் ராசா அருண்மொழி, நகரச் செயலர் ராமமூர்த்தி, ஒன்றியச் செயலர் தங்கச்சாமி ஆகியோர் முன்னிலையில், திமுகவினர் ஊர்வலமாகச் சென்று, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, அதிமுக., மதிமுகவினரும் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்தனர்.