விருதுநகரில் கட்டையாபுரம் செல்லும் சாலை பள்ளமாக உள்ளதால் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
விருதுநகர் நகராட்சி 25-ஆவது வார்டுக்கு உள்பட்ட கட்டையாபுரம் பகுதியில் சுமார் 400 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 50 மேற்பட்ட எண்ணெய் மற்றும் பருப்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், அப்பகுதிக்கு சிறிய மற்றும் கனரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி வந்து செல்லும். அதேபோல், பொது மக்களும் இச்சாலையையே பயன்படுத்தி வநதனர். இந்நிலையில், கட்டையாபுரம் மற்றும் சாத்தூர் சாலையை இணைக்கும் புறவழிச்சாலையானது சேதமடைந்துள்ளது. இச்சாலையை சீரமைக்க வேண்டுமென பொது மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஓராண்டுக்கு முன்னர் அப்பகுதியில் புதிய சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமும் விடப்பட்டது. ஆனால், பணிகள் நடைபெறாதாதல், தற்போது பெய்த மழைக்கு சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், இப்பகுதியில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இச்சாலையை விரைவில் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.