விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கன மழையின் காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் அவதியடைந்தனர்.
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோயிலுக்கு தமிழ் புத்தாண்டு, கார்த்திகை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
அடிவாரத்தில் இருந்து ஆற்றை கடந்துதான் கோயிலுக்கு செல்ல வேண்டும்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அய்யனாரை வழிபட சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர்.
ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் வெள்ளிக்கிழமை இரவே மலையடிவாரத்தில் தங்கி இருந்தனர்.
இந் நிலையில் நள்ளிரவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள ராஜாம்பாறை, முள்ளிக்கடவு, வழுக்கு பாறை மற்றும் மலட்டாறு போன்ற பகுதிகளில் கன மழை பெய்தது.
இதனால் அதிகாலை அளவில் அய்யனார் கோவில் ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக, ஆற்றை கடந்து கோயிலுக்கு செல்ல பொது மக்களுக்கு வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். காலை சுமார் 6 மணியளவில் ஆற்றில் நீர் குறைந்ததால் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப் பட்டது. ஆற்றில் இடுப்பளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் வனத்துறையினர் உதவியுடன் பொது மக்கள் கயிறு பிடித்து ஆற்றை கடந்து சென்றனர். பண்டிகை காலங்களில் பக்தர்கள் வருகை அதிகரிப்பதால், ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.