விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் கேத்தநாயக்கன் பட்டியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின் கான்கிரீட் மேற்கூரை தளம் சேதமடைந்துள்ளதால் அதை சீரமைக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.
கேத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 600க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசுக் கட்டடத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியும் நியாயவிலைக்கடையும் இயங்கி வருகிறது. இக்கட்டடம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில் உரிய பராமரிப்பு இன்றி நாளடைவில்அதன் சிமெண்ட் பூச்சு உதிர்ந்ததுடன் அக்கட்டடத்தின் கான்கிரீட் மேற்கூரை தளமும், முகப்புப் பகுதியில் உள்ள பால்கனி சுவரும் படிப்படியாக உதிர்ந்து கம்பிகள் வெளித்தெரிகின்றன.
நாள்தோறும் நியாயவிலைக்கடைக்கு வரும் பொதுமக்கள் கட்டட முகப்புப் பகுதி பால்கனி தம்மீது விழுந்துவிடுமோ எனும் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். இதுதொடர்பாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விபத்துநேரும் முன் விரைவில் நடவடிக்கை எடுத்து முகப்பில் உள்ள பால்கனிச் சுவரையும், கான்கிரீட் மேற்கூரையையும் சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.