ராஜாபளையம் அருகே உள்ள சாஸ்தாகோயில் நீர்த்தேக்கம் நிரம்பியதால் விவசாயத்திற்கு 50 கனஅடி தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை திறந்துவிடப்பட்டது.
ராஜபாளையம் பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வந்தது.
இதனால் தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சாஸ்தாகோயில் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சாஸ்தாகோயில் நீர்தேக்கத்தில் நீர் வரத்து அதிகரித்தது. 35 அடி கொள்ளவு கொண்ட சாஸ்தா கோயில் நீர் தேக்கம் சனிக்கிழமை நிரம்பியது.
தற்போது கடுமையான வறட்சி நிலவி வருவதால் விவசாயிகள் நலன்கருதி அணையிலிருந்து உடனடியாக விவசாயத்திற்கு 50கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நகரக்குளம் மற்றும் வாழவந்தான் கண்மாய் பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.