விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடிப்படை வசதி இல்லாததால் மிகுந்த சுகாதார சீர்கேட்டால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது கீழக்கோபாலபுரம். இந்த கிராமத்தில் குன்னூர்-கே.புதூர் சாலை மிகவும் மோசமான நிலையில் போக்குவரத்திற்கு பயனற்றுள்ளது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தினமும் விபத்துக்கு ஆளாகின்றனர்.
காளியம்மன்கோவில் அருகே தரைப்பாலம் சேதமுற்றுள்ளது. 1, 2, மற்றும் 3 ஆவது வார்டு பகுதிகளில் மின் கம்பங்கள் வழியே செல்லும் மின்சார வயர்கள் மிகவும் தாழ்வாகச் செல்கிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. அவற்றை உயரத்திற்கு உயர்த்த வேண்டும்.
4 வது வார்டு பகுதியில் உள்ள தெருவில் மகளிர் பொது சுகாதார வளாகம் அமைத்துத் தர வேண்டும். 2,3 மற்றும் 4 வது வார்டு பகுதிகளில் உள்ள தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைத்துத் தர வேண்டும்.
முனியாண்டி கோவில் பாதை, அங்கன்வாடி மையம் மற்றும் நியாயவிலைக் கடை உள்ள பகுதிகளில் கழிவு நீர் பாதை இல்லாததால் தெருவில் கழிவு நீர் தேங்கி சகதியாக உள்ளது.
இதனால் சுகாதார சீர்கேடு காரணமாக கொசு உற்பத்தியாகி பல்வேறு நோய் தொற்றுகளுக்கு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆளாகியுள்ளார்கள்.
போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.