ஸ்ரீவில்லிபுத்தூர், ரெங்கநாதபுரம்-திருமலாபுரம் யாதவர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட சந்தனமாரியம்மன் கோயில் பூக்குழி உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து கலந்து கொண்டனர்.
இக் கோயிலின் பூக்குழி உற்சவம் இம் மாதம் 4 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. 12-ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கோயில் பூசாரி ரவீந்திரன் முதலில் தீமிதித்தார். பின்னர் ஏராளமான பெண் பக்தர்கள் குழந்தைகளுடன் தீ மிதித்தனர்.
நகர் காவல் ஆய்வாளர் எம்.ஜஸ்டின் பிரபாகரன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.