விருதுநகர் மாவட்டம் புலிப்பாறைபட்டியில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 20 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் அவர்கள் அளித்த மனு: புலிப்பாறைபட்டியில் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த 50 குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 5.12.1991 இல் 20 குடும்பங்களுக்கு மூன்று சென்ட் வீதம் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால், மாற்று சமுதாயத்தை சேர்ந்த சிலர் எங்களுக்கு வழங்கப்பட்ட நிலம், வீடு மற்றும் தெருக்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனால், எங்கள் இடத்தை நில அளவையர் மூலம் அளந்து கொடுக்குமாறு இரண்டு முறை மனு அளித்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. எனவே, அரசு சார்பில் எங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட இடத்தை அளந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.