செங்கோட்டை- கோயம்புத்தூர் கோடைக் கால சிறப்பு ரயிலை வாரம் இரு முறை இயக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்துக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ரயில் திங்கக்கிழமைகளில் ஏப் 16, 23, 30, மே 7, 14, 21, 28, ஜூன் 04, 11, 18, 25, ஜூலை 2 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூரிலிருந்து இரவு 10.15 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 8 மணிக்கு ராஜபாளையம் வந்து செங்கோட்டைக்கு காலை 9.20 மணிக்கு போய்ச் சேரும்.
செவ்வாய்க்கிழமைகளில் ஏப்ரல் 10, 17, 24, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26, ஜூலை 3 ஆகிய தேதிகளில் செங்கோட்டையிலிருந்து இரவு 8 மணிக்கு ரயில் புறப்படும். ராஜபாளையம் ரயில் நிலையத்திற்கு இரவு 9.25 மணிக்கு வந்து கோயம்புத்தூருக்கு மறுநாள் காலை 5.30 மணிக்கு போய் சேரும். பொள்ளாச்சி சந்திப்பு, உடுமலைப்பேட்டை, பழனி, ஓட்டன்ச்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில்சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய இடங்களில் ரயில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் 3 அடுக்கு ஏசி, தூங்கும் வசதியுள்ள இரண்டாம் வகுப்புக்களுக்கான முன்பதிவு பெட்டிகள் உள்ளதால் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் சிலம்பு, கொல்லம் சிறப்பு ரயில்கள் வாரம் இருமுறை இயக்கப்படுவதுபோல் இந்த ரயிலையும் வாரம் இருமுறை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
சனிக்கிழமை இரவு கோவையிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு செங்கோட்டை யில் புறப்படும் வகையில் விடுமுறையில் வரும் பயணிகள் நலன் கருதி இயக்க நெல்லை, விருதுநகர் மாவட்ட பயணிகள் வலியுருத்துகின்றனர்.