சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் திங்கள்கிழமை மாணவர்கள்- ஆசிரியர்கள் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஏ.பி.செல்வக்குமார் தலைமை வகித்தார். இதில் தூத்துக்குடி வ.உ.சி. கல்வியல் கல்லூரி முன்னாள் முதல்வர் தாமோதரன் பேசியதாவது:
மாணவர்களுக்கு கற்பிப்பது என்பது ஒரு கலையாகும். அந்த கலையை அனைத்து ஆசிரியர்களும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் உடல் சார்ந்த நடவடிக்கைகளையும், அறிவு சார்ந்த நடவடிக்கைகளையும் மாணவர்கள் கவனித்துக்கொண்டு வருவார்கள். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். மாணவர்களுக்கு வீட்டிலும், சமுதாயத்திலும் சிறிய அளவிலான பிரச்சனைகள் இருக்கலாம். அது அவர்களுக்கு பெரிதாக தெரியும். எனவே ஆசிரியர்கள் மாணவர்களைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
மதிப்பெண்கள் குறைவாக வாங்கும் மாணவர்களையும் ஆசிரியர்கள் மதிக்க வேண்டும். அவர்களிடம் உன்னால் முடியும் எனக்கூறி தன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் பள்ளியிலும், சொந்த வாழ்க்கையிலும் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் தங்களது திறமையை வளர்த்துக்கொண்டால்தான் மாணவர்களை சிறப்பாக உருவாக்க இயலும். என்றார். முன்னதாக மாணவி எஸ்.ஹெலன் வரவேற்றார்.