விருதுநகரில், திங்கள்கிழமை பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் சிறிது நேரம் புறக்கணித்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் சத்திரியா மகளிர் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக வந்த ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோடை விடுமுறை நாள்களில் விடைத்தாள் திருத்தும் பணி வழங்க கூடாது. தேர்வு பணி, விடைத்தாள் திருத்தும் பணிக்கு உழைப்பூதியம், மதிப்பூதியம் இரட்டிப்பாக வழங்க வேண்டும். விடைத்தாள் திருத்தும்
மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும்.
நிலுவையிலுள்ள முதுகலை ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். சிறிது நேரத்திற்கு பின்னர் மீண்டும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் சென்றனர்.