விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிதரப்போராட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தினர்.
திருத்தங்கலில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலை எட்டு சமூகத்தார் நிர்வாகம் செய்து வந்தனர். இந்நிலையில் திருத்தங்கல் சின்னதம்பி என்பவர் கோயில் நிர்வாகத்தில் வரவு, செலவு கணக்கில் மோசடி நடைபெறுவதாகவும், இதனை விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை ஏற்றுக்கொண்ட நீதி மன்றம், இந்து அறநிலையத்துறையினர் கோயில் வரவு, செலவு கணக்குகளை சரிபார்க்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து இந்து அறைநிலையத்துறை இணை ஆணையாளர் ஹரிஹரன் கோயில் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்து 38 பக்க அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மேலும் கடந்த வாரம் நடைபெற்ற பங்குனிப் பொங்கல் விழா இந்து அறநிலையத்துறை இணை ஆணையாளர் ஹரிகரன் கண்காணிப்பில் நடைபெற்றது. இதையடுத்து கோயில் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறை எடுத்துக்கொள்ளும் என்று தகவல் பரவியது.
இதனால் மாரியம்மன் கோயில் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், எட்டு சமூகத்தாரே நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 30 பெண்கள் உள்பட சுமார் 100 பேர் கோயில் வளாகத்தின் முன் உள்ள மண்டபத்தில் உள்ளிருப்பு, உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து கோயிலுக்கு வந்த இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஹரிஹரன் செய்தியாளர்களிடம், நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் செயல்படுவோம் என்றார்.
போராட்டக்காரர்களுடன் அவர் எதுவும் பேசவில்லை. இப்போராட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கி மாலை சுமார் 5.30 மணிக்கு நிறைவடைந்தது.