விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், நீட் தேர்வை கண்டித்தும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
ராஜபாளையம் ஜவஹர் மைதானம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புரட்சிகர இளைஞர் முன்னணி, விவசாய விடுதலைக் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் அதிகாரம், ஆதி தமிழர் கட்சி, தமிழ்புலிகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட 12 கட்சிகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்களை பாதிக்கும் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும், விவசாய நிலங்களை பாதிக்கும் மீத்தேன்
மற்றும் நியூட்ரினோ திட்டங்களை கைவிட வலியுறுத்தியும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதைக் கண்டித்தும், ஹிந்தி மொழியை திணிப்பதை கண்டித்தும் மற்றும் எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொள்பவர்கள் மீது காவல் துறையினர் மூலம் பதியப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.