சாத்தூரில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 பேரை சாத்தூர் தாலுகா போலீஸார் கைது செய்தனர்.
சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையம் பகுதியில் வீட்டில் கஞ்சா விற்கப்படுவதாக சாத்தூர் தாலுகா போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாத்தூர் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் தமிழழகன் மற்றும் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு அமீர்பாளையம் பகுதியில் வசித்து வரும் சுப்பையா (76) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் 1.5 கிலோ கஞ்சா வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்துஅங்கிருந்த சுப்பையா, அவரது மனைவி லட்சுமி (50) மற்றும் தங்கம் (56), கருப்பசாமி (65) ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.