விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆட்டுக்கிடையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீவிபத்தில் 26 ஆடுகள் உயிரிழந்தன.
அருப்புக்கோட்டை அருகே உள்ள சுக்கில நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோணைமுத்து (65). விவசாயியான இவர் ஆடுகள் வளர்ப்புத் தொழில் செய்து வருகிறார்.
இவர் தனது கிராமம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராம விவசாயி ஒருவர் கேட்டுக் கொண்டபடி அவ்விவசாயியின் வயல்வெளியில் தனது ஆடுகளை கிடை போட்டிருந்தார். இந்நிலையில் சோணை முத்து தனது குலதெய்வ வழிபாட்டுக்காக செவ்வாய்க்கிழமை காலை வெளியூர் சென்றார். பின்னர் மீண்டும் இரவு சுமார் 7 மணிக்கு தனது ஆடுகள் உள்ள கிடைக்கு வந்தாராம். அப்போதுதான் அருகிலிருந்த சோளக் காட்டில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட தீ பரவி சோணைமுத்துவின் ஆடுகள் முகாமிட்ட பகுதியைத் தாக்கி மொத்தமிருந்த 26 ஆடுகளும் இறந்துவிட்டது தெரிய வந்துள்ளது.
இதில் மிகவும் வேதனையடைந்த சோணைமுத்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இதுதொடர்பாக வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிபத்து தற்செயலானதா அல்லது யாரேனும் செய்த சதிவேலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.