அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியில் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
அருப்புக்கோட்டையின் புறநகர்ப் பகுதியான கஞ்சநாயக்கன்பட்டியில் வசிப்பவர் ஜெயவெங்கட்ராமன்(53).
இவர் அரசுத்துறை ஒப்பந்ததாரராக உள்ளார்.இவர் சென்ற செவ்வாய்க்கிழமை காலை தனது வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தாருடன் சாத்தூர் அருகே உப்பத்தூர் கிராமத்திலுள்ள குலதெய்வ கோயில் வழிபாட்டிற்காகச் சென்றுள்ளார். மீண்டும் இரவு சுமார் 7 மணிக்கு வீட்டிற்கு வந்து வீட்டைத்திறந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 27 பவுன் நகைகள், ஒரு செல்லிடப்பேசி மற்றும் நவீன கேமரா ஆகியவை திருடுபோயிருப்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.செவ்வாய்க்கிழமை பகலிலேயே இத்திருட்டுச் சம்பவம் நடந்திருப்பதும், இதேபோல புறநகர்ப் பகுதிகளான கஞ்சநாயக்கன்பட்டிக்கு அடுத்துள்ள ராஜீவ் நகர்,ஆத்திபட்டி பகுதிகளில் அடிக்கடி திருட்டு நடப்பதும் இப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.