விருதுநகர் அருகே இனாம்ரெட்டியபட்டி அரசு உயர்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகள் கழிப்பறையை சுத்தம் செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியரை இடமாறுதல் செய்ததை ரத்து செய்யக் கோரி கிராம மக்கள் புதன்கிழமை அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் அருகே உள்ள இனாம் ரெட்டியபட்டியில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்தல், வகுப்பறை மற்றும் வளாகத்தை சுத்தம் செய்ய வலியுறுத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பெற்றோர்கள் செவ்வாய்க்கிழமை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், மாவட்ட கல்வி துறை அலுவலர்கள் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இனி வரும் காலங்களில் மாணவர்களிடம் வேறு எந்த வேலையும் வழங்கப்பட மாட்டாது என உறுதியளித்தனர். இந்நிலையில், இப்பிரச்னைக்கு காரணமான உடற்கல்வி ஆசிரியர் பாலசந்தர், துப்புரவு பணியாளர் சோனை ஆகியோர் வேவ்வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், ஆசிரியர் பாலசந்தரை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அரசு பேருந்தை புதன்கிழமை சிறைபிடித்தனர். மேலும், பள்ளி அருகே போராட்டத்திலும் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற சூலக்கரை போலீஸார் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மகேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடற்கல்வி ஆசிரியரின் இடமாறுதல் ரத்து செய்யப்படும், அவர் மீண்டும் அதே பள்ளியில் பணி புரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.