விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள 43 கால்நடை உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள 43 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ளோர் விண்ணப்ப்பிக்லாம். மாவட்ட இனசுழற்சியின் அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும், வயது வரம்பு குறைந்த பட்சம் 18 இருக்க வேண்டும். அருந்ததியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு அதிகபட்ச வயது 35-க்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) வயது 32 -க்குள் இருக்க வேண்டும். பொது பிரிவினருக்கு வயது 30-க்குள் இருத்தல் வேண்டும். 1.7.2015 அன்றுள்ளபடி (பட்டப்படிப்பு முடித்தவர்கள், ஆதரவற்ற விதவைகள், முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுதிறனாளிகளுக்கு வயது வரம்பு உச்சவரம்பில் அரசு விதிகளின் படி சலுகைகள் உண்டு. இதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற தகுதிகளாக, கால்நடைகளை கையாளத் தெரிந்திருக்க வேண்டும், மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம்: தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2017-இன் படி நிலை-2 ரூ.15,900 (அடிப்படை ஊதியம்) வழங்கப்படும்.
விண்ணப்பங்களை இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் -626002 என்ற முகவரிக்கு பிப். 26-க்குள் சாதாரண அஞ்சல் மூலமாக அல்லது நேரிடையாகவோ வழங்கலாம். நேர்காணல் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெறும் தகுதியான விண்ணப்பதாரர்கள் இனச்சுழற்சி அடிப்படையில் மாவட்ட ஆட்சியரால் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு தொடர்பானவற்றை மாற்றியமைப்பதற்கும், தேர்வினை எந்த நிலையிலும் நிறுத்துவதற்கும் மற்றும் ரத்து செய்வதற்கும் மாவட்ட ஆட்சியருக்கு முழு அதிகாரம் உண்டு என அதில் தெரிவித்துள்ளார்.