விருதுநகர் அருகே பாலவநத்தம் கிராமத்தில், பட்டா மாறுதல் வழங்குவதற்கு ரூ. 4 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஓய்வுபெற்ற வருவாய் ஆய்வாளர் ஆகிய இருவரையும், லஞ்ச ஒழிப்பு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (24).
இவர், பாண்டியம்மாள் என்பவரின் பெயரில் உள்ள வீட்டை தன் பெயருக்கு பட்டா மாறுதல் செய்வதற்காக விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில், இக்கிராமத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர் சேர்மக்கனி (50) மற்றும் ஓய்வுபெற்ற வருவாய் ஆய்வாளர் (மலைப்பட்டி) ஜெயபிரகாஷ் (59) ஆகியோர், கிருஷ்ணனிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளனர்.
இது குறித்து கிருஷ்ணன் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். அதனடிப்படையில், ரசாயனம் தடவிய எட்டு 500 ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கிருஷ்ணனிடம் கொடுத்தனுப்பினர்.
அந்தப் பணத்தை, பாலவநத்தம் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த ஜெயபிரகாஷ் மற்றும் சேர்மக்கனி ஆகியோர் வாங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
இதில், விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணைக் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், காவல் ஆய்வாளர் விஜயகாண்டீபன் உள்ளிட்டோர் இருந்தனர்.