விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில் உள்ள கழிப்பறைகளை சுத்தமாகப் பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர் நகராட்சி 24 வார்டுகளை கொண்டுள்ளது. இந்த வார்டுகளில் வசிப்பவர்கள் திறந்தவெளி மலம் கழிப்பதைத் தடுப்பதற்காக, நகராட்சிப் பகுதியில் உள்ள அண்ணா நகர், மேலகாந்தி நகர், செல்லையாரம்மன் கோயில் தெரு, வெள்ளகரை ரோடு, வடக்கு ரத வீதி, பூங்கா, மெயின் ரோடு, முக்குராந்தல் உள்ளிட்ட பகுதிகளில் இலவசம் மற்றும் கட்டண கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றில் பல கழிப்பறைகள் செயல்படாமல் பூட்டியே உள்ளன. சில கழிப்பறைகள் பயன்பாடின்றி திறந்து கிடப்பதால், சமூக விரோதச் செயல்கள் அதிகளவில் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, பூட்டிக் கிடக்கும் கழிப்பறைகளை திறந்தும், அனைத்துக் கழிப்பறைகளையும் சுத்தமாகப் பராமரித்தும், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நகராட்சி நிர்வாகவே ஏற்று நடத்த வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.