விருதுநகர் வருமான வரித்துறை அலுவலகம், அருப்புக்கோட்டை வர்த்தக சங்கமும் இணைந்து வருமான வரி விழிப்புணர்வு முகாமை, வர்த்தக சங்கக் கட்டட வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடத்தின.
இம்முகாமுக்கு, விருதுநகர் வருமானவரித் துறை உதவி ஆணையர் கலைச்செல்வி தலைமை வகித்தார். வருமானவரித் துறை அலுவலர்கள் சூர்யப்பிரகாஷ், ஜெயராம், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருமானவரி கணக்குத் தணிக்கையாளர்கள் (சார்டர்டு அக்கவுன்டன்ட்) பாஸ்கரன், பெரியசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இதில் உதவி ஆணையர் கலைச்செல்வி, இந்தியாவில் வருமான வரிசெலுத்துவோரின் எண்ணிக்கையை 10 சதவீதமாக உயர்த்தும் நோக்கில், வர்த்தகர்கள் உள்ளிட்ட பொதுமக்களைச் சந்தித்து வருமானவரித் துறையின் விதிமுறைகள், சட்டங்கள் குறித்து விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். மேலும், வீடு வாங்குதல், விற்றல், விவசாயம் உள்ளிட்டவற்றுக்கு எவ்வாறு வருமான வரி செலுத்த வேண்டும் என்பது பற்றியும் விளக்கமளித்தார்.
இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வர்த்தக சங்கத் தலைவர், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.