விருதுநகர் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு டிசம்பர் மாதச் சம்பளம் வழங்கக் கோரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு டேவிட் தலைமை வகித்தார். இதில், நகராட்சி ஆணையரின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்தும், டிசம்பர் மாத ஊதியம் வழங்கிடக் கோரியும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், ஒவ்வொரு மாதமும் இதுபோல் சம்பளம் வழங்காததால் ஊழியர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாவதாகவும், அரசு சார்பில் வழங்கப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்தாமல் தேவையில்லாத செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் முத்துராஜ், மாவட்டச் செயலர் ச.இ. கண்ணன் உள்ளிட்டபலர் கலந்து கொண்டு, நகராட்சி நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்துப் பேசினர். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.