மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை, ஏழாவது முறையாக ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அருப்புக்கோட்டையில் அரசு உதவிபெறும் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர், தன்னிடம் படித்த மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அதையடுத்து, இவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேரா சிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார், சில தினங்களுக்கு முன் சென்னையில் நிர்மலா தேவியின் குரல் மாதிரி பரிசோதனை எடுத்து வந்தனர். மேலும், அவர் மீது 1,160 பக்க குற்றப் பத்திரிகையையும் விருதுநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதனிடையே, நிர்மலா தேவி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஏழாவது முறையாக திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை, நீதிபதி முத்துசாரதா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.