விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் என 188 பெண்கள் உட்பட 680 பேர் செவ்வாய்க்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி செயலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வு வழங்குதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கெனவே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், விருதுநகர் அருப்புக்கோட்டை உள்ளிட்ட 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணி புரியும் அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் என 188 பெண்கள் உட்பட 680 பேர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பெரும்பாலான அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.