சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் கடந்த வெள்ளிக்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் காயமடைந்த 4 பேரும் இறந்துள்ளனர்.
சிவகாசி அருகே காளையார் குறிச்சி கிராமத்தில் கனகபிரபு (42) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் வெள்ளிக்கிழமை ராக்கெட் பட்டாசுக்கு மருந்து செலுத்தும் பணியில் சுக்கிரவார்பட்டி முருகேசன் (42), எரிச்சநத்தம் அழகுபாண்டி(26), திருத்தங்கல் மாரிபாண்டி (47), காளையார் குறிச்சி ராமசாமி(67) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட உராய்வு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு தொழிலாளர்களும் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் முருகேசன், ராமசாமி ஆகிய 2 பேர் உயிரிழந்த நிலையில், திங்கள்கிழமை எரிச்சநத்தத்தைச் சேர்ந்த அழகுபாண்டி மற்றும் திருத்தங்கல் மாரிபாண்டி ஆகியோரும் இறந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 4 பேரும் உயிரிழந்தது அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.