ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் ரூ.36 லட்சம் செலவில் சேதமுற்ற சாலையை மேம்படுத்தி புதிய சாலை அமைக்கும் பணிக்கு செவ்வாய்க்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள இடையபொட்டல் தெருவில் இருந்து மம்சாபுரம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து இருந்தது. அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆகியோர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா முத்தையாவிடம் சாலையின் நிலை குறித்து கூறி சீரமைக்க உதவுமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து எம்எல்ஏ முயற்சியின் பேரில் சாலைகளை சீரமைக்க அரசு ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து சாலை அமைக்கும் பணிக்கு செவ்வாய்க்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
இதில் சந்திரபிரபா முத்தையா பங்கேற்று பணிகளைத் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாபு, பொறியாளர் ராமலிங்கம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் த.முத்தையா, கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.