அருப்புக்கோட்டை தாலுகா காவல் ஆய்வாளரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாகவும், வன வேங்கை பேரவை சார்பாகவும் இராமலிங்கா நெசவாளர் காலனி அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் நகரச் செயலாளர் காத்தமுத்து தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாமஸ் தொடக்கவுரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் பூங்கோதை வரவேற்றார்.
இதில் ரோந்துப்பணியின்போது அப்பாவி பொதுமக்கள் சிலரிடம் விசாரணை என்கிற பெயரில் கடுமையாக நடந்து கொள்ளும் அருப்புக்கோட்டை தாலுகா காவல் ஆய்வாளருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. வனவேங்கைப் பேரவை மாநிலச் செயலாளர் இரணியன், திண்டுக்கல் மாவட்ட துணைச் செயலாளர் ராஜேஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் சாமுவேல்ராஜன், குறிஞ்சியார் சமூக நீதிப்பேரவை மாநிலத் தலைவர் கோவை ஜெகன்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.