விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனர்.
ஒத்தையால் கிராமத்தில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள தெருக்களில் ஊராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய், சின்டெக்ஸ் டேங்க் ஆகியன கடந்த நான்கு மாதங்களாக மிகவும் சேதமடைந்த நிலையில் காட்சிப் பொருளாக உள்ளது.
இதனை சரிசெய்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று, ஒத்தையால் கிராம மக்கள் சார்பில் ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், கிராம மக்கள் ஏராளமானோர், சாத்தூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் டி.எஸ்.அய்யப்பன், முத்துவேல் ஆகியோர் தலைமையில், புதன்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரிடம் மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர், விரைவில் குடிநீர் வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அப்போது, கோடை காலத்துக்குள் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் சேதமடைந்த சின்டெக்ஸ், குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.