ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இடையன்குளம், கன்னார்பட்டி மற்றும் சாத்தூர் ஒத்தையால் பகுதியை சேர்ந்தவர்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்த மனு விவரம்:
ஸ்ரீவில்லிபுத்தூர் இடையன்குளம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பட்டாசு ஆலை, நூற்பாலை மற்றும் கூலி தொழில் செய்து வருகின்றனர். இக்கிராமத்தில் மயான எரிமேடை, சாலை, தெருவிளக்கு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. எனவே, இலவச வீட்டுமனை பட்டா வழங்கி அடிப்படை வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதிதமிழர் கட்சியின் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியச் செயலாளர் பொன்னுச்சாமி தலைமையில் கிராமத்தினர் மனு அளித்தனர்.
அதேபோல், சாத்தூர் ஒத்தையால் கிராமம் வடக்கு தெருவில் பட்டியல் இனத்தை சேர்ந்த 200- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் பிற தெருக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் நாங்கள் வசிக்கும் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மட்டுமன்றி பொதுமக்களும் அவதிப்பட்டு வருகிறோம். இதன் காரணமாக கூலித் தொழில்களுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஒத்தையால் வடக்கு தெரு பகுதிக்கு குடிநீர் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.