விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள பாத்திரக்கடையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருமானவரித் துறையினரின் சோதனை பிற்பகலுடன் நிறைவு பெற்றது. அதில், பல்வேறு ஆவணங்கள், கோப்புகளை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
அருப்புக்கோட்டை முஸ்லிம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (45). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், வெளிநாட்டில் தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டு, அருப்புக்கோட்டை அண்ணாசிலை பகுதியில் பிரம்மாண்ட பாத்திரக்கடை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
மேலும், இக்கடையை தொடங்கிய மறு ஆண்டே மேலும் ஒரு வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனைக் கடையும் தொடங்கினாராம்.
குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியடைந்ததால், சாகுல் ஹமீதுவின் கடைகளில் ஜிஎஸ்டி வரிக் கணக்கும், வருமானவரித் தாக்கல் கணக்கும் முரண்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றிருக்கலாம் என வருமானவரித் துறையினருக்கு சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், அத்துறையின் தணிக்கைப் பிரிவிலிருந்து விருதுநகர் மாவட்ட வருமான வரித்துறை துணை ஆணையர் கலைச்செல்வி தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவினர், கடந்த வியாழக்கிழமை சாகுல் ஹமீதுவின் இரண்டு கடைகளிலும் தீவிர சோதனை மற்றும் தணிக்கையில் ஈடுபட்டனர்.
இச்சோதனை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி வரை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரு கடைகளிலுமிருந்து பல்வேறு ஆவணங்கள், கோப்புகளை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றனர்.
இந்த ஆவணங்களை தீவிர தணிக்கை செய்த பின்னர், அதில் கிடைக்கப்பெறும் விவரங்கள் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.