விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் முயற்சியால் பழங்குடியினர் 13 பேருக்கு விலையில்லா பசுக்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூரை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில், விலையில்லா பசுக்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்திருந்தனர். இந்த மனுக்களை ஆணைக் குழுவின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் பரிசீலித்து, ஆண்டாள் கோயில் கோசாலையில் இருந்து பசுக்களை வழங்க மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு அனுமதி கோரினர்.
ஆட்சியர் அனுமதி அளித்ததன்பேரில், மனு அளித்த 13 பேருக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆ.முத்துசாரதா, செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ஜெ.கிறிஸ்டல் பபிதா ஆகியோர் வியாழக்கிழமை விலையில்லா பசுக்களை வழங்கினர்.
அவற்றைப் பெற்றுக்கொண்ட பழங்குடியினர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கும் நடவடிக்கை எடுத்த நீதிபதிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆண்டாள் கோயில் தக்கார் கி.ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.