மதுரை விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்த அரசு ஊழியரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
மதுரை விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் தனியார் நூற்பாலையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மர்ம நபர் ஒருவர், சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறையை வியாழக்கிழமை தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்தார்.
அதையடுத்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர், ரயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்நிலையில், மர்ம நபர் தொடர்புகொண்டு பேசிய செல்லிடப்பேசி எண், முகவரியைக் கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அந்த செல்லிடப்பேசி எண் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடையது என்பது தெரியவந்தது. மேலும், போலீஸாரின் தொடர்விசாரணையில், காரியாபட்டி அரசு விடுதியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரியும் திருநாவுக்கரசு மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில், காரியாபட்டி போலீஸார் திருநாவுக்கரசுவை பிடித்து, அருப்புக்கோட்டை டிஎஸ்பி. வெங்கடேசன் தலைமையில் விசாரணை நடத்தினர்.
இதில், திருநாவுக்கரசு, பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.13 லட்சம் வரை வாங்கியுள்ளதாகவும், அந்த பணத்தை ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு பெண் அலுவலரிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், கூறியபடி வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி தராததால் ஏற்பட்ட பிரச்னையில் சில மாதங்களுக்கு முன்பு திருநாவுக்கரசு ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றுள்ளார்.
இந்நிலையில், தன்னிடம் பணம் கேட்டு தொந்தரவு அளித்த ஒருவரை சிக்கவைப்பதற்காக இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அதையடுத்து, திருநாவுக்கரசுவை போலீஸார் கைது செய்தனர்.