ராஜபாளையம் அருகே கடந்த 5 ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ள மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் தாலுகா, சமுசிகாபுரம் கிராமத்தில் வார்டு எண் 2, 3 4 -இல் மகளிர் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் எனக் கோரி, முதல்வரின் தனிப்பிரிவில் இப்பகுதியினர் சார்பில் கடந்த மே மாதம் விண்ணப்பிக்கப்பட்டது.
இதற்கு முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து, "மனுதாரர் தெரிவிக்கப்பட்டுள்ள பகுதியில் வசிக்கும் மகளிர் அருகிலுள்ள வேல்தேவர் நகர் மகளிர் சுகாதார வளாகத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு' தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த சுகாதார வளாகம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடின்றி பாழடைந்து உள்ளது. எனவே, மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாய் திட்டம் மூலம் கடந்த 2016-2017 இல் புதுப்பிக்கப்பட்டுள்ளது என கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 5 வருடமாக இந்த சுகாதார வளாகம் செயல்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.