விருதுநகர் அகமது நகரில் ரூ. 1.67 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டுக்கு வராமல் பல மாதங்களாக காட்சிப் பொருளாக உள்ளது.
விருதுநகர் நகராட்சியில் கடந்த 2014-15 இல் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து, அப்போதைய தமிழக முதல்வர், விருதுநகர் நகராட்சிக்கு ரூ.25 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்தார். இதில், நகராட்சி அலுவலகத்தில் புதிய கட்டடம் அமைக்க ரூ.2 கோடி, சாலைகள் சீரமைக்க ரூ.14.70 கோடி, ஆட்டுச் சந்தையில் கட்டடம் கட்ட ரூ.1 கோடி, வி.என்.பி.ஆர். பூங்கா சீரமைக்க ரூ.1 கோடி மற்றும் மூன்று இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட ரூ. 5 கோடி, நினைவுத் தூண் அமைக்க ரூ. 70 லட்சம், சுகாதார வளாகங்கள் அமைக்க ரூ.60 லட்சம் என இந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதில், சாலை, சுகாதார வளாகம் அமைக்கும் பணி மற்றும் நினைவுத் தூண் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. அதேபோல், தலா ரூ. 1.67 கோடியில் விருதுநகர் அகமது நகர், விஎன்பிஆர் பூங்கா அருகே இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டன. அதில், அகமது நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. ஆனால், திட்ட மதிப்பீட்டை விட கூடுதலாக தூண்கள் அமைக்கப்பட்டதால், ஒதுக்கப்பட்ட நிதி அனைத்தும் பயன்படுத்தப்பட்டு விட்டதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு, பிரதான குழாய் பதிக்கப்படாததால் இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரமுடியாத நிலை உள்ளது. இதுகுறித்து நகராட்சி பொறியாளர்களிடம் கேட்டபோது, பிரதான குழாய் அமைக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் செயல்பாட்டுக்கு வரும் என்றனர்.