விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேருந்து நிலையத்திலிருந்து அல்லாளப்பேரிக்கு தினமும் பேருந்து இயக்க வலியுறுத்தி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை காரியாபட்டி பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேருந்து நிலையத்திலிருந்து அல்லாளபேரி கிராமத்துக்கு கிழவனேரி, வெற்றிலை முருகன்பட்டி, வல்லப்பனபட்டி கிராமங்கள் வழியாக தினம் தோறும் அரசு பேருந்து சென்று வந்தது. இந்நிலையில், இச்சாலையில் கருவேல மரங்கள் அதிகம் இருப்பதால் பேருந்து கண்ணாடி உடைவதாகக் கூறி, பேருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், இப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொது மக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் காரியாபட்டி சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சாலையில் உள்ள முள் செடிகளை அகற்றக் கோரி காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் கிராம மக்கள் சார்பில் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக அல்லாள பேரி கிராமத்திற்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காரியாபட்டி பேருந்து நிலையத்தில் அல்லாள பட்டி கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக பேருந்து வசதி செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.