விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்ததாக 5 பேரை வெம்பக்கோட்டை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
சாத்தூர் அருகே தாயில்பட்டியை அடுத்துள்ள கலைஞர் காலனி பகுதியில் உள்ள வீடுகளில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் தயாரித்து வைக்கபட்டிருப்பதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இத் தகவலின் பேரில் வெம்பக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துசெல்வி உள்ளிட்ட போலீஸார் அப் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.
இதில் அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி(34), வைரமுத்து(34), முனீஸ்வரன்(51), பாஸ்கரன்(55) ஆகியோர் வீடுகளில் தலா 10 கிலோ வெடிகளும், இதே பகுதியைச் சேர்ந்த ஸ்டான்லி(35) என்பவர் வீட்டில் 16 பண்டல்கள் பட்டாசுகளையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து கருப்பசாமி, வைரமுத்து, முனீஸ்வரன், பாஸ்கரன், ஸ்டான்லி ஆகியோர் மீது வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.