விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் வேதியியல் ஆசிரியர்களுக்கான இரு நாள் பயிற்சி, கருத்தரங்கு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கிருஷ்ணன்கோயில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
பெங்களூருவில் உள்ள லண்டன் ராயல் சொசைட்டி சார்பில் பரிசோதனைக் கூட வேதியியல் என்ற தலைப்பில் இப் பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியைத் தொடங்கி வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.சுவாமி நாதன் பேசியதாவது: பள்ளிகளில் ஆய்வுக்கூட வசதிகளை புதிய முறையில் தற்போதைய வளர்ச்சிக்கு ஏற்ப உருவாக்கி அதனை மாணவர்களுக்கு புரிந்துகொள்ளும்படி கற்பிப்பது வேதியியல் ஆசிரியர்களுடைய இன்றைய முக்கிய கடமை என்றார். பின்னர் மாணவர்களுக்கான மூன்று பயிற்சி புத்தகங்களை அவர் வெளியிட முதல் பிரதியை பல்கலைக் கழக பதிவாளர் வெ.வாசுதேவன் பெற்றுக் கொண்டார்.
பெங்களுரு, ராயல் சொசைட்டி பயிற்சியாளர் என்.பத்மாவதி, சென்னை வேதியியல் ராயல் சொசைட்டி பயிற்சியாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் பரிசோதனைக்கூட வேதியியல் பற்றி புதிய முறையில், விளையாட்டு, சமநிலை சேர்த்தல், சமன்பாடு செய்தல் போன்ற வழிகளில் பள்ளி மாணவர்களுக்கு புரியும் வகையில் எளிய வழிமுறைகள் குறித்து பயிற்சிகள் வழங்கினர். பயிற்சியில் சுமார் 250 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணை பதிவாளர் பி.ஜி.குருசாமிபாண்டியன் செய்திருந்தார்.