விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பழுதான அடிகுழாய் மற்றும் மின் மோட்டார்களை சீரமைக்காததால் தண்ணீர் கிடைக்காமல் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தற்போது பத்து நாள்களுக்கு ஒரு முறையே குடிநீர் வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் தண்ணீரை பொதுமக்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், குளிப்பது உள்ளிட்ட தேவைகளுக்கு நகராட்சிக்கு சொந்தமான அடி குழாய் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் வரும் உப்பு நீரை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். விருதுநகர் நகராட்சி பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட அடி குழாய்கள்
மற்றும் 200-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இவற்றில், பாத்திமா நகர், ஏடிபி காம்பவுண்ட், மேற்கு பாண்டியன் காலனி, அன்னை சிவகாமிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 50 சதவீத அடி குழாய்கள் பழுதாகி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால், தேவையான தண்ணீர் கிடைக்காமல் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், அடிகுழாய் மற்றும் மோட்டார்கள் பராமரிப்பு பணிக்கு தேவையான உதிரி பாகங்கள் நகராட்சியில் கையிருப்பு இல்லை எனவும் நகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, பொது மக்கள் நலன் கருதி நகராட்சி பகுதிகளில் பழுதான அடி குழாய்களை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.