அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்ட வழக்கில் உதவிப் பேராசிரியர்களான நிர்மலாதேவி, முருகன் மற்றும் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை செப். 14 இல் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திலகேஸ்வரி திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
அருப்புக்கோட்டை அரசு உதவி பெறும் தனியார் கலை கல்லூரியில் உதவி பேராசிரியையாகப் பணி புரிந்தவர் நிர்மலா தேவி. இவர், தன்னிடம் படித்த மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும், இதில், தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியராக பணி புரிந்த முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நிர்மலா தேவி, முருகன் ஆகியோர் தங்களை பிணையில் விடக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம், சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், அவர்களுக்கு நீதிமன்றங்கள் பிணை வழங்கவில்லை.
இந் நிலையில், நிர்மலாதேவியை ஒரு வாகனத்திலும், முருகன், கருப்பசாமி ஆகியோரை மற்றொரு வாகனத்திலும் விருதுநகர் நீதிமன்றத்திற்கு போலீஸாரால் திங்கள்கிழமை அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர். இவ் வழக்கை விசாரணை செய்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி திலகேஸ்வரி, நிர்மலாதேவி உள்பட மூன்று பேரையும் செப். 14 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
மேலும், அன்றைய தினம் சம்பந்தப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட உள்ளதாகவும் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேரையும் போலீஸார் மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.