அருப்புக்கோட்டை வட்டம், ராமானுஜபுரம் கிராமத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ள கழிவுநீர் வாருகால்களை விரைவில் சீரமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமானுஜபுரம் கிராமத்தில் சுமார் 800 பேர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் அனைத்து தெருக்களிலும் 10 ஆண்டுகளுக்கு முன் கழிவுநீர் வாருகால்கள் அமைக்கப்பட்ட நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து தெருக்களையும் காங்கிரீட் சாலையாக மாற்றப்பட்டது. இந்த காங்கிரீட் சாலையானது, வாருகால்களை விட ஓரடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளதாலும், பழைய வாருகால்கள் அகலம் குறைவாக அமைக்கப்பட்டதாலும், கனமழை பெய்தால் பெரும்பாலான வீடுகளுக்குள் மழை நீர் கழிவுநீரோடு புகுந்து விடுகிறது.
மேலும், பழைய வாருகால்களில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகளும், உடைப்பும் ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் செல்ல தடை ஏற்பட்டுள்ளது.
எனவே, வாருகால்களை அகலப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை நீக்கி, வாருகால்களை புதிதாக உயர்த்திக் கட்ட வேண்டுமென கடந்த சில ஆண்டுகளாக கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது குறித்து ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.