சாத்தூர் அமீர்பாளையத்தில் குடியிருப்பு அருகே கடந்த 3 ஆண்டுகளாக கழிவு நீர் தேங்கியுள்ளதால், வாருகால் அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஒன்றியம் சத்திரபட்டி ஊராட்சிக்குள்பட்ட அமீர்பாளையத்தில் 1500 குடியிருப்புகள் உள்ளன. ஆனால், இப்பகுதியில் வாருகால் வசதி இல்லை. இதனால், சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பு அருகே கழிவுநீர் தேங்கியுள்ளது. இதன்மூலம், பொதுமக்களுக்கு நோய் பரவும் சூழ்நிலை நிலவுகிறது.
வாருகால் இல்லாததால், சாக்கடை நீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்கள் மற்றும் பாம்பு, தவளைகள் வீடுகளுக்குள் புகுந்துவிடுவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், இப்பகுதியில் சுகாதார வளாகம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.
இது குறித்து பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
எனவே, இப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிவுநீரை அகற்றி வாருகால் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.