சிவகாசியிலுள்ள ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு சகல ஐஸ்வர்ய அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டது.
மக்களிடையே பண பற்றாக்குறை தீரவும், மக்கள் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று சுபிட்ஷமாக வாழவும், இக்கோயிலில் சகல ஐஸ்வர்ய அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டது. கோயிலின் நுழைவுவாயிலை தவிர, பிரகார தூண்கள், பீடத்தின் முன்பகுதி, பீடத்தின் உள்பகுதி உள்ளிட்டவை ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இதில், 2000, 500, 200, 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்படிருந்தன.
இதற்காக, பொதுமக்களிடமிருந்து ரூ. 6 லட்சம் வசூல் செய்யப்பட்டது. கோயிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் ஐஸ்வர்ய அலங்காரத்தை கண்டு ரசித்தனர். முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை, கோயில் தலைவர் ரவீந்திரன், பூசாரி கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.